போலியான ஆன்லைன் முதலீட்டு வர்த்தக whatsapp குழு மூலமாக சுமார் 3.4 கோடி மோசடி செய்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 நபர்களை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த சத்தியநாதன் (68) என்பவர் அளித்த புகாரியின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் பெங்களூரை சேர்ந்த Fyers Securities அதிகாரிகள் என்று கூறிய மர்ம நபர்கள் அவரை FYERS VIP என்ற whatsapp குழுவில் இணைத்துள்ளனர்.
அதில் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழில் முறை விவாதங்கள் மூலமாக நம்பிக்கை ஏற்படுத்தி FYERSHNI என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என கூறியதால் சத்தியநாதன் ஜூலை 7 முதல் ஜூலை 25ஆம் தேதி வரை தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து மூன்று கோடியே 40 லட்சத்தை மோசடியாளர்களுக்கு குறிப்பிட்ட 13 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார்.
பிறகு முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற முயற்சித்தபோது அந்த மொபைல் செயலி முற்றிலும் முடக்கப்பட்டு காணாமல் போனது. இதனை தொடர்ந்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரிதமாக செயல்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய எதிரியான பாலசுப்பிரமணியன் தஞ்சாவூர் ஜெகநாத் நகர் பகுதியை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த முருகேஷ், எப்சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் எப்.சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் பெண்கள். விசாரணையில் முக்கிய எதிரிகள் தலைவர்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள நபர்களை அணுகி வங்கி கணக்குகள் கொடுத்தால் அதிக கமிஷன் என்று ஆசை வார்த்தை கூறி பயன்படுத்தியது. சில வங்கி கணக்குகள் மூலம் சுமார் 45 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யப்பட்டு காசோலை மூலமாக பணம் எடுக்கப்பட்டதுடன் அதற்காக கமிஷன் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
