திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியில், சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதல் தோல்வியடைந்ததால் இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேங்கூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீப ரோஷினி, தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், அந்த நபர் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த மாணவி, மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
நேற்று மாலை மாணவியின் தாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தீப ரோஷினி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருவெறும்பூர் போலீசார், அந்த இன்ஸ்டாகிராம் காதலன் யார் என்பது குறித்தும், தற்கொலைக்குத் தூண்டிய காரணங்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
