திருப்பூர் ஏடிஎம்மில் போலி நோட்டு மழை…! ‘கலர் ஜெராக்ஸ்’ போட்டு கைவரிசை காட்டிய மளிகை கடைக்காரர்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on மார்கழி 25, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில், செலுத்தப்பட்ட பணத்தைச் சோதித்தபோது 12 எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், முருகம்பாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வந்த ராஜேந்திரன் (45) என்பவர், தனது கடையிலேயே கலர் ஜெராக்ஸ் மெஷினைப் பயன்படுத்தி போலி நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

   

மளிகைக்கடை வியாபாரத்துடன் சேர்த்து வட்டிக்குத் தொழில் செய்து வந்த ராஜேந்திரன், கடந்த மூன்று மாதங்களாகத் தன்னிடம் பணம் வாங்க வருபவர்களிடம் அசல் நோட்டுகளுடன் இந்த போலி நோட்டுகளையும் கலந்து கொடுத்து ஏமாற்றியுள்ளார். போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து, போலி நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

   

இந்தச் சட்டவிரோதச் செயலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், அவர் கொடுத்த போலிப் பணம் எங்கெல்லாம் பரவியிருக்கிறது என்பது குறித்தும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.