புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் சரகம் விளாபட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகள் கௌசல்யா (28). இவர்கள் வீட்டில் ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் கால்நடைகளை வயல் பகுதியில் ஓட்டிச் சென்று வீட்டில் இருக்கும் கவுசல்யா மேய்த்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல நேற்று காலை வீட்டில் இருந்து ஆடு மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்ற கவுசல்யாவை மாலை நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை. மகள் வீடு திரும்பாததால் செல்வராஜ் தேடிச்சென்ற போது விளாபட்டி- பாக்குடி சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கௌசல்யா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
உடனே தகவல் அறிந்து போலீசாரும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிறகு போலீசார் கௌசல்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கௌசல்யாவின் உடலில் வெளி காயங்கள் இல்லை என்றாலும் உயிருக்கு போராடிய நேரத்தில் பறித்த கையில் புல் செடிகள் இருந்தது. மேலும் நாக்கு சிறிது வெளியே வந்த நிலையிலும் இருந்துள்ளது. இளம் பெண் தனியாக இருப்பதை பார்த்து வெளிநவர்கள் வந்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
