இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதை உணர்த்தும் சில காலை நேர அறிகுறிகளை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலையில் கண் விழிக்கும்போது பார்வை மங்கலாகத் தெரிவது அல்லது தாங்க முடியாத தாகத்துடன் வாய் வறண்டு போவது போன்றவை சர்க்கரை நோயின் முக்கிய எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
மேலும், தூக்கத்திலிருந்து எழுந்த பின்னரும் உடல் மிகுந்த சோர்வுடன் காணப்படுவது அல்லது குமட்டல் உணர்வு ஏற்படுவது உங்கள் உடலில் குளூக்கோஸ் அளவு சீராக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. கை மற்றும் கால்களில் அடிக்கடி ஏற்படும் கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல் போன்றவை நரம்பு மண்டல பாதிப்பின் தொடக்கமாக இருக்கலாம் என்பதால் இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது.
முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகும். சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், தகுந்த மருத்துவ ஆலோசனை மற்றும் கட்டுக்கோப்பான உணவு முறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடர முடியும்.
