சென்னை, மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்ற இளைஞர், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவரது குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்குச் சென்றிருந்தபோது, ரோஷன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இன்று அதிகாலை குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், ஜன்னல் வழியாகப் பார்த்தனர். அப்போது ரோஷன் நாராயணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அவரை மீட்டுப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரோஷன் நாராயணன் இருந்த அறையைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு கடிதம் சிக்கியது.
அந்தக் கடிதத்தில், “தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல ஓர் ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், இதனால் மன உளைச்சல் அதிகரிப்பதாகவும் எழுதியிருந்தார். மேலும், தனது சகோதரரிடம் சண்டையிட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு, பெற்றோர் தன்னை மன்னித்து விடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். போலீசார் அவரது கைபேசியைக் கைப்பற்றி, தற்கொலைக்கான சரியான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
