தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளதால் அந்த கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பாமக மூத்த தலைவர் ஏகே மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் திருமண விழாவிற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பாமக தலைவர் அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். இவர்களுடைய இந்த சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில் கனிமொழி எம்பி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்
