பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய திறமையானவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுத் திட்டத்தை (NMMS) செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற 8ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
8ஆம் வகுப்பில் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுத்து, உயர்நிலைக் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு ரூ.12,000 உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
NMMS தேர்வில் கலந்துகொள்ள, மாணவர்கள் 7ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு 50%). மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற, மாணவர்கள் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
