தபால் அலுவலகத்தின் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit – RD) என்பது பாதுகாப்பானதும், அரசின் உத்தரவாதம் பெற்றதுமான ஒரு பிரபலமான சிறுசேமிப்புத் திட்டமாகும். இந்தக் கணக்கைத் தொடங்க வெறும் ₹100 இருந்தாலே போதும். இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையைச் சேமிப்பதன் மூலம், முதிர்வின்போது கணிசமான வட்டியுடன் கூடிய பெரிய தொகையைப் பெறலாம்.
தற்போது, அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு 6.70% வட்டி விகிதம் வழங்குகிறது. உதாரணமாக, ஒருவர் தினமும் ₹333 சேமிக்க ஆரம்பித்தால் (மாதம் ₹10,000), 10 வருடங்கள் முடிவில், மொத்தச் சேமிப்பான ₹12 லட்சத்துடன், வட்டியாகச் சுமார் ₹5,08,546 சேர்ந்து, மொத்தமாக ₹17,08,546 வரை கிடைக்கும்.
இதேபோல், தினமும் ₹222 சேமித்தால் (மாதம் ₹6,660), 10 வருடங்களின் முடிவில் சுமார் ₹11,37,891 வரை பெற முடியும். இந்த RD திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, கணக்கைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குக் கொண்டு சென்றால், டெபாசிட் செய்த தொகையில் 50% வரை கடனாகப் பெறலாம். இந்தக் கடனுக்குக் கூடுதலாக 2% வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.
இந்த RD திட்டத்தை ஒரு நபர் தன் பெயரிலோ, குழந்தைகளுக்கோ, மூத்த குடிமக்களுக்கோ அல்லது பெற்றோர், குழந்தைகள் சேர்ந்தும் கூட்டுக் கணக்காகவும் (Joint Account) தொடங்கலாம். இந்தச் சேமிப்புக் காலம் பொதுவாக 5 வருடங்கள் என்றாலும், மேலும் 5 வருடங்களுக்கு நீட்டிக்கும் வசதியும் இதில் உள்ளது. ஆனால், மாதாந்திரத் தவணையைச் செலுத்தத் தவறினால், மாதத்திற்கு 1% அபராதம் விதிக்கப்படும்; தொடர்ந்து 4 தவணைகள் தவறினால் கணக்கு மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
