நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இந்த பாதிப்பு சீரடைந்து வந்தாலும் இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. இந்த நிலையில் 10வது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி 24 புறப்பாடு விமானங்கள் 12 வருகை விமானங்கள் என மொத்தம் 36 இண்டிகோ விமானங்களின் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்துள்ளனர். ஆனால் புதன்கிழமையான நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று அது பாதியாக குறைந்துள்ளதால் பயணிகள் ஓரளவு நிம்மதியாக உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கமான விமான சேவைகள் இயக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
