தமிழகத்தில் கிட்டத்தட்ட 75 நாட்களுக்குப் பிறகு விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்திய விஜய் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே சரளை என்ற பகுதியில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் டிசம்பர் 18ஆம் தேதிக்கு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 84 நிபந்தனைகள் கொண்ட பட்டியலை போலீஸ் வழங்கி பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் முதல்முறையாக பொது இடத்தை தேர்வு செய்து நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இது மற்ற மாவட்டங்களுக்கு வழிகாட்டியாக அமையும். 84 நிபந்தனைகள் போலீசார் கொடுத்துள்ளனர். வாகனத்தில் நின்றபடி விஜய் பேச உள்ளார். இந்தக் கூட்டத்தில் மொத்தம் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். பாண்டிச்சேரி சிறிய மாநிலம் என்பதால் அங்கு க்யூ ஆர் நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் தமிழகம் பறந்து கிடக்கும் மாநிலம் என்பதால் இங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது. தேர்தல் நெருங்க நெருங்க எப்படி கூட்டணி அமையும்? எந்த வகையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். முன்னாள் அமைச்சர்கள் சிலர் இணைய போகின்றனர்.
அதை யார் என்று சொல்லிவிட்டால் அங்கு இடர்பாடுகள் ஏற்படும். விஜய் தனது முதல் சுற்று பயணத்திலேயே வாகனத்தில் மூன்று படங்கள் தெளிவாக இருக்கின்றன. பேரறிஞர் அண்ணா,விஜய் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் இணைந்து தான் வாகனத்தின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் கசிந்த நிலையில் தற்போது செங்கோட்டையன் ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தற்போது அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.
