கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே காணாமல் போன சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஹரிகரன் என்பவருடைய மூன்று வயது மகள் கிருத்திக்ஷா , வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாயமானார். இதனால் பல இடங்களில் மகளைத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். உடனே தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் குழந்தை விளையாடிக்கொண்டே அருகில் உள்ள கிணறு பகுதியை நோக்கி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீயணைப்புத் துறையின் உதவியுடன் இரவு முழுவதும் கிணற்று பகுதியிலும் வயலிலும் தீவிரமாக தேடுதல் நடத்தியதில் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை குழந்தை விளையாடிய இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சோளக்காட்டில் அதன் உரிமையாளர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரும் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்ததால் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
