திருச்சியில் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி காரில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 13 ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை. போலீசார் பலவிதமான கோணங்களில் விசாரணை நடத்தியும் முக்கிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் டிஐஜி அருண்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டு வழக்கை விரைவாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து திருச்சி மதுரை நெல்லை சென்னை புழல் உள்ளிட்ட மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் ராமஜெயம் கொலை குறித்து விசாரிக்க மார்க் செய்யப்பட்ட முக்கிய இடங்களில் ஒன்றான திருச்சி பாலக்கரை அருகே உள்ள சினிமா தியேட்டரிலும் தீவிர விசாரணை நடத்தினர். தியேட்டர் உரிமையாளர் மற்றும் அங்குள்ள ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
2012ம் ஆண்டுக்கு பிறகு சில ஆண்டுகள் செயல்படாமல் இருந்த அந்த சினிமா தியேட்டர் பிறகு புதுப்பிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டுக்குப் பின்பு மீண்டும் செயல்பட தொடங்கியது. ராமஜெயம் கொலை தொடர்பாக அந்த தியேட்டரில் வைத்து ஏதும் சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாமல் மர்மம் நீடிக்கும் நிலையில் ராமஜெயம் கொலை குற்றவாளிகள் விரைவில் டிஐஜி வருண்குமார் விசாரணையில் சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
