தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பாமாயில் என உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஏராளமான குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றன. இதில் வயது மூத்தவர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களால் ரேஷன் கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனை கருதி தமிழக அரசு சார்பாக தாயுமானவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி டிசம்பர் மாத உணவுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நியாய விலை கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இந்த மாதத்திற்கான பொருள் வீடு தேடிச்சென்று விரைவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
