தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்களில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதே சம யம் தமிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும் என்றும் கூறி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்.
கட்சியை பலப்படுத்தி மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். எங்களுக்கு செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது 2026 ஆம் ஆண்டு அமையும். வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளது என்று பேசினார். அப்போது ஸ்டாலின் மற்றும் விஜய் இருவரில் யார் தளபதி என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாட்டுக்காக எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள் தான் உண்மையான இந்தியாவின் தளபதிகள் என்று பிரேமலதா ஒரே வரியில் பதிலளித்து சென்றார்.
