தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை நோக்கி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி வியூகங்களும் தொகுதி பங்கீடும் குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தங்களுடைய தனி பெரும்பான்மையை இழந்து வரும் நிலையில் கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதனை கருதி அதிமுக தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் இதரக் கட்சிகள் திமுக விடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தி வருகின்றன.
திமுகவை விட அதிமுகவில் அதிக அளவு சச்சரவு எழுந்து வருகின்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இருந்தாலும் பல வெளி வராத பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் தற்போது புதிதாக ஓபிஎஸ் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. NDA கூட்டணியில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது, அவரைத் தவிர வேறு யாரையாவது முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் கூட்டணியில் இணைவோம் என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.
ஆனால் பாஜக ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்ட நிலையில் இவர்களின் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருந்தது. அதே சமயம் முதல்வர் வேட்பாளரை மாற்றுவது என்பது பாஜகவின் தனிப்பட்ட முடிவு கிடையாது. அது இபிஎஸ் கையில் தான் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியது இபிஎஸ்சை முதல்வர் வேட்பாளரில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. முதல்வர் வேட்பாளரை மாற்றும் செய்தி அறிந்த இபிஎஸ் பாஜக, ஓபிஎஸ் மற்றும் தினகரன் மீது கடும் கோபத்தில் இருப்பதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
