திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவர், சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகி, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோருடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இவர் திமுகவில் இணையும் போது, தவெக உறுப்பினர் படிவங்கள் மற்றும் அடையாள அட்டைகளைக் கிழித்து எரித்ததோடு, அதை வீடியோவாகச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதனால், தவெக-விலிருந்து விலகிய சமீருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில், சமீர் மீண்டும் தவெக குறித்து தவறாக பேசியதாகக் கூறப்படும் ஒரு வீடியோவைச் சமூக வலைதளத்தில் வெளியிட்டதால், ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் சிலர் சமீரின் வீட்டின் அருகே சென்று “எங்கள் தலைவரைத் தப்பாகப் பேசுவியா?” என்று கேட்டுப் பிரச்சினையில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதில், இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சண்டையைத் தடுக்க முயன்ற, சமீர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான ரமேஷ் (51) என்பவரை யாரோ தாக்கியதில், அவரது மூக்கு உடைந்து இரத்தம் வந்தது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த ரமேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
