தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட திமுக மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுக ஐடி விங் அமைப்பாளர் உள்ளிட்ட பலர் ஒரே நாளில் விலகி அதிமுகவில் இணைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் கட்சி மாறி வருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
