உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும் 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதனிடையே ரவீந்திர பிரதாப் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கையில் மகன் மூலமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது 13 வயது மகன் அதிக நேரம் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவது மற்றும் தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான். இது தாய்க்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மகனின் எதிர்காலம் குறித்து ஷீலா அடிக்கடி கவலை கொண்டு கணவரிடம் புலம்பியுள்ளார். தன் மகனின் இந்த பழக்கத்தை மாற்ற அவர் எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கணவரிடம் மிக வருத்தத்துடன் மகன் தொடர்பாக பேசியுள்ளார்.
பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் ரவீந்திர பிரதாப் கண் விழித்த போது அருகில் இருந்த மனைவியை காணவில்லை. உடனே அதிர்ச்சி அடைந்து வீட்டில் தேடிய போது பூஜை அறையில் ஷீலா தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷீலாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகனின் எதிர்காலம் பற்றி கவலையில்தான் ஷீலா இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
