திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தகாத உறவு தொடர்பான தகராறில் மரக்கடை உரிமையாளரை பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசியை சேர்ந்த மரக்கடை உரிமையாளர் சின்னப்பராஜ் என்பவருக்கும் பூமணி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே நேற்று இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சின்னப்பராஜ் வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் அந்தப் பெண் சின்னப்பராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.
கீழே விழுந்த அவர் மீது ஆத்திரம் அடைந்த பூமணி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சின்னப்பராஜ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
