ஆன்லைன் வேலை என்று கூறிய மோசடியில் சிக்கிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. ஜான்சி மாவட்டத்தில் உள்ள பர்வா சாகர் பகுதியை சேர்ந்த பாவ்னா பால் (21) என்ற பெண் காணாமல் போனதை தொடர்ந்து அவருடைய கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் பெண் வழக்கமாக கோவிலுக்கு செல்லும்போது ஒரு குவளையில் தண்ணீருடன் வீட்டை விட்டு சென்ற நிலையில் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.
பிறகு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் செல்லும் வழியை கண்டறிந்து இறுதியாக ஆற்றின் கரையில் இறந்த நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடுமையான மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அந்தப் பெண் பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகளை தேடிக்கொண்டிருந்த போது அதிக ஊதியத்துடன் வீட்டில் இருந்து வேலை என்று பென்சில் நிறுவனத்தின் பேக்கேஜிங் வேலை குறித்த விளம்பரத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார். வேலையை பதிவு செய்வதற்காக அவரிடம் 35 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என கேட்டதால் அவரும் நம்பி பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொள்ளவில்லை.
அவர்களுடைய தொலைபேசி எண்ணும் செயலில் இல்லை என தெரிகிறது. பிறகுதான் அவரது போலி விளம்பரம் என அறிந்து கொண்டார். பணத்தை இழந்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். மோசடிக்கு ஆளான அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
