தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வரும் நாட்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் அதிக கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
