தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சமீபத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் சூசகமாக தெரிவித்து இருந்தார். ஏறத்தாழ அதிமுக கூட்டணியில் இணைய விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று நடந்த தமிழக வெற்றி கழகம் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2026 தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சி இடையே தான் போட்டி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றி கழகம் வருகையால் அதிமுகவிற்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும். அமமுகவை தவிர்த்து விட்டு தமிழகத்தில் எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. திமுக கூட்டணி இன்றும் பலமாக இருப்பதற்கு காரணமே எடப்பாடி பழனிச்சாமி தான். அவர்தான் அடாவடியாக செயல்பட்டு அதிமுகவை பலவீனப்படுத்தி வருகிறார் என்ற டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
