தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. அதன்படி சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என eps-க்கு கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டு வந்ததாலேயே செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாக இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சியில், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் போட்டோ இல்லை என நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன், கருணாநிதி போட்டோ உடன் இருந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் எனக் கூறி இபிஎஸ் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
