தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கலில் இருந்த விஜய் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்து கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் விஜயின் அடுத்த கட்ட சுற்றுப்பயணம், 2026 தேர்தல் வியூகம், கட்சியை வலுப்படுத்துதல், தொண்டர் படை உருவாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் அறிவித்த புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முடிந்த கையோடு இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது
