சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு ஆறு சிறப்பு திட்டங்களை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலுக்கு கொடுத்தார். தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது மூன்றரை லட்சம் வரை வழங்கப்படும் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியான அரசாணையின்படி தூய்மை பணியாளர்களுக்கு காலை மதியம் மற்றும் இரவு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவில் இட்லி, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி ஆகியவை அடங்கும். மேலும் இந்த உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
