பொதுவாகவே இரவு நேரங்களில் போலீசார் பல காரணங்களுக்காக வாகன சோதனை நடத்துவது வழக்கம். அப்படி சோதனை செய்யும் போது பழைய குற்றவாளிகள் மற்றும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் சிக்குவார்கள். இதனிடையே புதுக்கோட்டையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று அதிகாலை வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுகின்றதா என்பது குறித்து சோதனை நடத்தினர். அப்போது சென்னையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி செல்லக்கூடிய ஆம்னி பேருந்தை புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் அருகே போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகப்படும் படியாக ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் திறந்து பார்த்தபோது கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. அந்தப் பணம் ஹவாலா என்று போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அந்த பணம் இருந்த பையை போலீசார் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அமீர் (48) என்பது தெரிய வந்தது. அதனை தன்னிடம் ஒருவர் கொடுத்து புதுக்கோட்டையில் ஒருவரிடம் கொடுக்குமாறு கூறியதாகவும் அதற்கு 3000 ரூபாய் பணம் தருவதாக கூறி தந்து அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே சமயம் அந்த பணத்தை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து ஒருவர் வாங்கி கொள்வார் என்று கூறியதாக போலீசாரிடம் அந்த நபர் தெரிவித்தார். அந்தப் பையன் மொத்தம் 20,81,150 ரூபாய் பணம் இருந்த நிலையில் அதனை பறிமுதல் செய்து அமீரை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அந்த பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று முன்னுக்கு பின் முரணாக அவர் கூறி வந்தார். பிறகு ஸ்டேஷனுக்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணத்தை கொடுத்து அனுப்பியது யார், அதனை யாரிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
