சென்னையில் கடந்த சில நாட்களாகவே சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. முதலில் திரிஷா வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் அது வதந்தி என தெரிய வந்தது. உடனே முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகை என வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்தப் பிரச்சினை அடங்குவதற்குள் அடுத்ததாக தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் வீடு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடு, நடிகை சொர்ணமால்யா வீடு, புதிய தலைமுறை செய்தி டிவி அலுவலகம், இன்போசிஸ் IT நிறுவனம் என தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குழு மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அனைத்தும் வதந்தி என தெரிய வந்தாலும் அடுத்தடுத்து மிரட்டல்கள் வருவதால் சென்னை மக்கள் அனைவரும் அரண்டு போய் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
