கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி முருங்கவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டிற்கு திருவட்டார் பகுதியில் சேர்ந்த ஆனந்த் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெயிண்டிங் வேலைக்காக வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதே சமயம் ஜெய்சனின் தாய் ரெஜி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போது நட்பு அடிப்படையில் ஆனந்த் உதவி செய்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று வீட்டிற்கு வந்த ஜெய்சனிடம் அவரது தாய் ரெஜி அழுது அழுது கொண்டே விஷயத்தை கூறியுள்ளார். கழிவறையில் தான் மயங்கி விழுந்ததாகவும் கண்விழித்து பார்த்த போது தான் அணிந்திருந்த கம்மல் செயின் உள்பட 11 பவுன் தங்க நகையை காணவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது ஆனந்த் ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். ஏழையான தனது காதலிக்கு நகை வாங்கி கொடுக்க ஆசைப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜெபனேசர் வீட்டிற்கு சென்ற போது அவரது தாய் மயங்கி கிடந்ததும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆனந்த் தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
