பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த 30 வயது பெண் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு வந்த பெண் குளிக்க சென்றார். அப்போது ஜன்னல் வழியாக ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவன் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரது செல்போனை பிடுங்கி பார்த்தபோது அந்த பெண்ணை வீடியோ எடுத்தது உறுதியானது.
இதற்கிடையே மாணவனின் பெற்றோர் தங்களது மகன் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறி அதற்கான ஆவணங்களை காண்பித்தனர். இதனால் போலீசார் அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு மாணவனின் மனநலத்தை கருத்தில் கொண்டு ஸ்டேஷன் பெயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
