தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகி வருகின்றன. அதேசமயம் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுகவை மீண்டும் ஒன்று இணைக்க வேண்டும் என்று கூறி இபிஎஸ்-க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்சாவை நேரில் சந்தித்து பேசியதாக கூறி இருந்தார். அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்பது அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கோவை ஏர்போட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இணைய வேண்டும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும் என்பதே தனது ஆசை என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
