கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி மேரி ஜூலியானா(47) பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் மேரியின் கடைக்கு சிகரெட் வாங்குவது போல வந்த இரண்டு பேர் அவரை சுத்தியலால் தாக்கி 4 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மணல்மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன்(32), பீகாரைச் சேர்ந்த விஜயகுமார்(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
