அம்புலி பட பாணியில் நடந்த திரில்லிங் சம்பவம்… 42 ஆடுகளை கடித்துக்கொன்ற மர்ம விலங்கு… உச்சகட்ட அதிர்ச்சியில் ஊர்மக்கள்…!

By Srimathi on ஆவணி 11, 2025

Spread the love

மயிலம் பகுதியில் உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(35). இவர் கொங்கரப்பட்டு கிராம எல்லையில், பட்டி அமைத்து 120க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை மேய்த்து விட்டு அதனை கம்பி வேலி அமைக்கப்பட்ட பட்டியில் அடைத்து விட்டு செல்வது பிரகாஷின் வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, மறுநாள் அதிகாலை வந்து பார்க்கும் பொழுது 40க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து கிடந்தன. இதைத்தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பெயரில், வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 42 ஆடுகள் உயிரிழந்ததாக உறுதி செய்தனர். மேலும் இறந்த ஆடுகளை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உதவி வனப் பாதுகாவலர் தர்மலிங்கம் பேசுகையில், இப்பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் அதிகம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் ஆட்டுப்பட்டியில் கிடைத்த கால் தடங்களை வைத்து இரண்டு விலங்குகள் வந்ததாக தெரிகிறது. கால் தடத்தின் அளவை வைத்து பார்த்தால், ஒன்று பெரிய விலங்கு, மற்றொன்று அதன் குட்டியாக இருக்கக்கூடும். முழுமையான விசாரணைக்குப் பிறகு ஆடுகளை கடித்தது கழுதைப்புலியா அல்லது வேறு ஒரு விலங்கா என்பது தெரியவரும் என்றார்.

   

இதனைக் குறித்து பிரகாஷ் பேசுகையில், ஆட்டுப்பட்டிக்கு அருகே உள்ள புளிய மரத்தின் மீது ஏறி குதித்து தான், மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக் கொன்று இருக்க வேண்டும்.கோட்டப்பூண்டி, எதப்பட்டு, கொங்கரப்பட்டு, அவியூர் போன்ற கிராமங்களிலும் இதுபோன்ற சம்பவம் நடப்பதாக மக்கள் கூறி வந்தனர்.இச்சோக சம்பவத்தால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பெரும் பயத்தில் உள்ளோம். இச்சம்பவம் குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.