தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இலட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்களின் நிலையை அறிய அரசு தற்போது ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி kmut.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டு உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
