தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.
டி எம் சௌந்தர்ராஜன் 10000க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் 2500க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்த காலகட்டங்களில் அதிகளவில் மேடைக் கச்சேரிகளில் அவர் கலந்துகொண்டு பாட ஆரம்பித்தார். அதில் சினிமா மேடைக் கச்சேரிகளும் கோயில் திருவிழா போன்ற மேடைக் கச்சேரிகளிலும் பங்கேற்று பாடல்களை பாடினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர். இளையராஜா தன் இசையில் டி எம் சௌந்தர்ராஜனை அதிகமாகப் பயன்படுத்தவே இல்லை.

இந்நிலையில் டி எம் எஸ்-ன் மகள் தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஆரம்ப காலத்தில் என் அப்பா நடிகை பானுமதியோடு இணைந்து ஒரு பாடலை பாடினார். அந்த பாடல் பாடும்போது அவர் திரைத்துறைக்குப் புதிது. வயதிலும் இளையவர். அதனால் பானுமதி அவர்களோடு இணைந்து பாட பயந்துகொண்டே சென்றாராம்.
ஏனென்றால் பானுமதி அவர்கள் மிகவும் தைரியமானவர். அவர் எம் ஜி ஆரையே எதிர்த்துப் பேசி ஆட்டிப் படைத்தவர். அதனால்தான் அப்பா பயந்தாராம். பாட்டு பாடி முடிந்ததும் பானுமதி அம்மா “நல்லா பாடுனப்பா” எனப் பாராட்டினாராம். அதைக் கேட்டு என் அப்பாவுக்கு அவ்வளவு சந்தோஷம்” எனக் கூறியுள்ளார்.
