ஷங்கரின் முதல்வன் படத்தை தோல்விப் படமாக்க இந்த சதியெல்லாம் நடந்ததா?.. வியக்கவைக்கும் சம்பவங்கள்!

By vinoth on தை 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.

அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

   

இயக்குனர் ஷங்கரின் வெற்றிக்கு சுஜாதா ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். அவர் படத்துக்கு சுஜாதா இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி என தொடர்ந்து பணியாற்றினார். டைட்டிலில் சுஜாதா வசனம் என்று மட்டும் வந்தாலும், அவர் எல்லா படங்களிலும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த படங்களில் வசனங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் என்றால் அது ரஜினி நடித்த எந்திரன் படம்தான். அதன் பின்னர் ஷங்கர் தடுமாறி வருகிறார் என்பது கண்கூடு.

   

 

ஷங்கர் இயக்குனராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியப் படம் என்றால் அது முதல்வன் திரைப்படம்தான். அந்த படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டார் ஷங்கர். அந்த படத்தில் ரகுவரன் நடித்திருந்த முதல்வர் கதாபாத்திரம் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியைதான் குறிப்பிடுகிறது என விமர்சனங்கள் எழுந்தன. அதனால் கருணாநிதி ஆதரவாளர்கள் அந்த படத்தின் மேல் கோபத்தில் இருந்துள்ளனர்.

அதனால் படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த படத்தை மதுரையில் லோக்கல் கேபிள் சேனலில் ஓடவிட்டார்களாம். அதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என நினைத்துள்ளனர். இதை செய்தது கருணாநிதியின் ஆதரவாளர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இதைத் தாண்டியும் அந்த படம் வெற்றிப்படமாகவே அமைந்தது.