தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.
அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம்.
ஆனால் சிரஞ்சீவியை விட சுதாகர் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால் அவரையே தேர்வு செய்துள்ளார். அதுபற்றி பேசியுள்ள பாரதிராஜா “சிரஞ்சீவி வந்தான். ஆனால் சுதாகர் என்னை ஏமாற்றி விட்டான். அவனிடம் வேட்டியைக் கொடுத்து பாண்டி பஜாரில் நடக்க விட்டேன். பொருத்தமாக இருந்தான். அதனால் சிரஞ்சீவிக்குப் பதில் சுதாகரையே நடிக்க வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

அந்தளவுக்கு தன்மேல் அவருக்கு நம்பிக்கை அதிகம். அதே போல அவரிடம் தொழில் கற்றுக்கொண்டு வெளியே வந்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களும் அடக்கம். அது பாக்யராஜில் தொடங்கி சீமான் வரை நீளும் பட்டியல். இந்நிலையில்தான் சீமான் ஒரு மேடையில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்வதில் இருக்கும் கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.
அதில் “எங்க இயக்குனர் பாரதிராஜாகிட்ட உதவி இயக்குனராக வேலை செய்வது அவ்வளவு எளிதில்லை. திடீர்னு ராத்திரி 11 மணிக்குக் கூப்பிட்டு இப்ப ரசம் சாதம் வேணும்பாரு. அந்த பட்டிக்காட்டுல அந்த நேரத்துல ரசம் சோத்துக்கு நாங்க எங்க போறது? ஆளாளுக்கு ஒரு பக்கம் போய் எப்படியாவது ரெடி பண்ணுவோம்.” எனக் கூற அதைக் கேட்டு மேடையில் இருந்த பாரதிராஜா ரசித்து சிரித்து அதை ஆமோதித்துள்ளார்.
