சந்தன நறுமணம் கொண்ட சோப்பு என்றாலே நாம் நினைவுக்கு வருவது மைசூர் சாண்டல் சோப்பு தான். 100% சந்தன எண்ணையால் தயாரிக்கப்படுவது தான் மைசூர் சாண்டல் சோப் ஆகும். இது மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராஜா உடையாரால் தொடங்கப்பட்டது. இந்த மைசூர் சாண்டல் சோப் உருவாக்கப்பட்டதன் பின் இருக்கும் வரலாறு என்ன என்பதை பற்றி காண்போம்.

1916 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள சந்தன மரங்களைக் கொண்டு சந்தன எண்ணெய் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் தான் இது தொடங்கப்பட்டது. ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக ஐரோப்பாவிற்கு சந்தன எண்ணெய்களை ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. உடனே மன்னர் கிருஷ்ணராஜ உடையார் அந்த திட்டத்தை மாற்றி சந்தன பவுடர், சந்தன எண்ணெய் கலவையில் சந்தன சோப்பை உருவாக்க திட்டமிட்டு தொழிற்சாலையை உருவாக்கினார்.
100% சந்தன எண்ணெயால் தயாரிக்கப்பட்ட இந்த மைசூர் சாண்டல் சோப்பிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் 1980 ஆம் ஆண்டு இந்த சோப் நிறுவனம் கர்நாடக அரசு கைக்கு மாறி பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு கர்நாடகா சோப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றது. தற்போது சோப்பு மட்டுமல்லாமல் பவுடர், கிரீம்கள் என பலதரப்பட்ட தயாரிப்புகள் விற்பனையாகி வருகிறது.

மைசூர் சாண்டல் சோப்பிற்கு 2006 ஆம் ஆண்டு உலகிலேயே மிகவும் இயற்கையாக தயாரிக்கப்படும் சோப் என்ற அந்தஸ்துடன் புவிசார் குறியீட்டைப் பெற்றது. இந்தியாவில் மிகப் பிரபலமான அரசு நிறுவனமாக மைசூர் சாண்டல் சோப்பு உள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக மகேந்திர சிங் தோனியும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் மைசூர் சாண்டல் சோப்பை விரும்பி வாங்கி பயன்படுத்தும் மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.
