‘நான் வாந்தி எடுத்தத என்னையே சாப்பிட சொல்றீங்களா?’ – பிரபல இயக்குனரிடம் கோபப்பட்ட இளையராஜா- அப்படி என்ன சொன்னார்?

By vinoth on ஆவணி 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 90 கள் முழுக்க காதல் கதைகளுக்கான காலமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் காதல் படங்களாக அமைந்தன. அப்போதைய இளம் நடிகர்களான அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா, பிரபுதேவா உள்ளிட்டவர்கள் காதல் கதைகளில் நடித்துதான் தங்களை முன்னணி நடிகர்களாக வளர்த்துக் கொண்டனர்.

அப்படி காதலை மையமாகக் கொண்டு 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம்தான் தினம்தோறும். இந்த படத்தில் முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனால் படத்தின் இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் என்றே அழைக்கப்பட்டார்.

   

இடையில் அவர் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே மற்றும் காக்க காக்க ஆகிய படங்களில் பணியாற்றினார். காக்க காக்க படத்தில் இடம்பெற்ற காதல் காட்சிகளை எல்லாம் எழுதியது நாகராஜ்தான் என்று சொல்லப்படுகிறது. தினம்தோறும் என்ற வெற்றிப் படம் கொடுத்தும் அடுத்த 15 வருடங்களுக்கு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இதற்குக் காரணம் அவரின் மோசமானக் குடிப்பழக்கம்தான் என்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார்.

   

சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணல் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது. அதில் சினிமாவில் தனக்கு நடந்த சுவாரஸ்யமான தகவல் பற்றி பேசியுள்ளார். அதில் இளையராஜா குறித்து பேசும்போது “எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜாதான். அவரோடு ஆகாயம் என்று ஒரு படத்துக்காக ஒரே ஒரு நாள் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.

 

கம்போஸிங் உக்கார்ந்த போது நான் கதை சொன்னபோதே அவர் ட்யூன் போட ஆரம்பித்தார். நான் அந்த நேரத்தில் எனக்கு ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ பாடல் போல வேண்டுமென்று சொன்னேன். அந்த வார்த்தையைக் கேட்டதுமே ஹார்மோனியத்தை மூடிவிட்டு என்னைக் கோபமாகப் பார்த்தார்.

‘நான் வாந்தி எடுத்ததையே என்னை சாப்பிட சொல்கிறீர்களா’ எனக் கேட்டார். எனக்கு வார்த்தை வரவில்லை. ‘இல்லை சார்… உங்க பாடலதான் ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்’. அதற்கு அவர் ‘என்னிடம் இருந்து வந்துவிட்டால் அது என்னுடைய பாடல் இல்லை… உங்களுடையது என்றார். அதன் பின்னர் கொஞ்ச நேரம் கழித்து சமாதானம் ஆன அவர் தன்னுடைய சினிமா அனுபவங்களை எல்லாம் பகிர்ந்துகொண்டார்’ எனப் பகிர்ந்துள்ளார்.