தமிழ் சினிமா இப்போது மோசமான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வெளியாகும் 90 சதவீத படங்கள் ஓடுவதில்லை. இதனால் படங்கள் தயாரிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் பலரும் வேலையிழக்கும் அபாயமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் பிரபல பாடலாசியரும் இசையமைப்பாளருமான சத்யன் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் ஹிட் பாடல்களான ‘கலக்கப் போவது யாரு’, ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியவர்.
சத்யன் மகாலிங்கம் 1980 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி இந்தியாவின் சென்னையில் திரு.மகாலிங்கம் மற்றும் திருமதி மாரியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே இசை மீது கொண்ட் ஆர்வம் காரணமாக மெல்லிசைக் குழுக்களில் இணைந்து பாடகரானார். சத்யன் 1996 ஆம் ஆண்டு முதல் பல மெல்லிசை ஆர்கெஸ்ட்ராக்களில் பாடியுள்ள 2500 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
வசூல் ராஜா எம் பி பி எஸ் படத்தில் அவர் பாடிய பாடல் கவனம் பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை சத்யன் பாடியுள்ளார். அவர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பல நட்சத்திர இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். சக்தி FM, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்காக 100 க்கும் மேற்பட்ட ஜிங்கிள்கள் மற்றும் இசை ஆல்பங்களை அவர் இசையமைத்து நிரலாக்கியுள்ளார். இதுமட்டுமில்லாமல் பல பக்தி ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் “நான் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளேன். ஆனால் எனக்கு இப்போது சான்ஸ் இல்லை. சொன்னால் ஒரு மாதிரியாக இருக்கும். நான் இப்போது ஹோட்டல்ல வேலைக்கு போய்ட்டு இருக்கேன். பாட்ட எல்லாம் இப்போது இசையமைபபளர்களே பாடுறாங்க. இல்லன்னா ஒரு பாட்டு நாங்க பாடி அது நல்லா இருந்துட்டா, அதக் கேக்குற ஹீரோஸ் நானே பாடிடுறேன்னு சொல்லிடறாரு. அப்படி அவர் சொல்லலன்னா கூட இயக்குனர் அவர பாட சொல்லுறாரு. இதனால பாடகர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்பு கிடைக்காம போகுது. இத நான் எனக்காக மட்டும் சொல்லல. என் கூட இருக்கும் நிறைய பாடகர்களுக்காகவும் சேர்த்துதான் சொல்றேன்.” என எமோஷனல் ஆக பேசியுள்ளார்.
