தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார்.
ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.
தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் பலரும் உதவியாளர்களை வைத்துக் கொள்வது வாடிக்கை. கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலம் பின்னர் பாடல் ஆசிரியரானார். அதே போல வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த சினேகன் இன்று பாடல் ஆசிரியராக இருக்கிறார். ஆனால் இதுபோல வாலி யாரையும் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொண்டதே இல்லை.
அது குறித்து ஒரு நேர்காணலில் அவரே பேசியுள்ளார். அதில் “கண்ணதாசன் பாடல்களை சொல்ல சொல்ல எழுத ஒரு உதவியாளரை வைத்துக் கொள்வார். அப்படி அவர் சொல்வதை எழுதுபவருக்கு ஒரு பாடலுக்கு 100 ரூபாய் கிடைக்கும். அதற்காகதான் அவர் உதவியாளர் வைத்துக்கொண்டார். மற்றபடி வேறெந்த காரணமும் இல்லை.
ஆனால் நான் உதவியாளரே வைத்துக்கொள்ளவில்லை. ஒருவேளை வைத்துக்கொண்டால் அவன் வெளியே வந்து ‘வாலிக்கு பாடலே எழுத தெரியாது. அந்த பாட்டெல்லாம் நான்தான் எழுதினேன் என கிளப்பி விடுவான். எதுக்கு வம்பு என்றுதான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். கவிஞர் வாலியிடம் கங்கை அமரன் உதவியாளராக சேர ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரை வாலி சேர்த்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
