பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினி என்று சிறு குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால் வேலை பார்த்த தியேட்டரையே பின்னாளில் தனது வெள்ளந்தி நடிப்பால் உச்சம் தொட்ட ராமராஜனின் வாழ்க்கை பலருக்கும் ஒரு எனர்ஜி டானிக் எனலாம்.
1958ல் மதுரை மேலூர் அருகே உள்ள கிராமத்தில் பிறந்த ராமராஜன் அங்குள்ள தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்த்தவர். அந்த தியேட்டரில் திரையிட்ட திரைப்படங்களை பார்த்து பார்த்து இவரின் திரை அறிவும் ஆசையும் வளர்ந்தன. ஒரு கட்டத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இவரை சென்னைக்கு வண்டி ஏற்றியது. 1977. சினிமா உலகம் இவருக்கு ரத்தினகம்பளம் விரிக்கவில்லை. வெள்ளந்தியான கிராமத்து மனிதராக வேறு இருந்தார். கேலி கிண்டலுக்கு ஆளாகி வெறுப்பிலிருந்தவருக்கு கைகொடுத்தவர் இராம.நாராயணன்.
கையெழுத்து அழகாக இருப்பது உதவி இயக்குநர்களுக்கு ஒரு கூடுதல் தகுதி. ராமராஜனுக்கு கையெழுத்து அழகாயிருக்கவே உதவி இயக்குநரானார். இராம. நாராயணனின் சிவப்புமல்லி, சுமை, பட்டம்பறக்கட்டும், என தொடர்ந்து பல படங்களுக்கு உதவிஇயக்குநராக இருந்தார். சின்ன சின்ன வேடங்களிலும் தலைகாட்டினார்.
1985ல் நேரம் அல்லது யோகம் ஆரம்பித்தது. மண்ணுக்கேத்த பொண்ணு என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். படம் 100 நாள் ஓடி வெற்றிப்படமானது. அடுத்து சோலை புஷ்பங்கள். அதில் முக்கிய கேரக்டர் நடிகரானார். அதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நம்மஊரு நல்லஊரு படத்தில் கதாநாயகன் ஆனார். படத்தின் மாபெரும் வெற்றி இவரை முழுநேர கதாநாயகனாக்கியது. அடுத்து இவரே இயக்கி நடித்த ஒன்றுஎங்கள் ஜாதியே படமும் வெற்றி.
தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ராமராஜனுக்கு வாய்த்தது என்னவோ கிராமத்து வேடங்கள் தான். ஆனாலும் அதையே தனது பாஸிட்டிவ் ஆக்கி மீண்டும் கரகாட்டக்காரன் என்ற படத்தில் நடித்து அப்போதைய முன்னனி நடிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஆம்..! கரகாட்டக்காரன் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட வெற்றிக் காவியம். கதை ஒன்றும் வித்தியாசம் கிடையாது. சாதாரண கிராமத்து கதைதான்.
அதுவரை எந்தபடமும் பண்ணாத சாதனைகளை இந்தபடம் செய்தது. திரையிட்ட அத்தனை தியேட்டர்களிலும் 50 நாள். 40 தியேட்டர்களில் 100நாள். 20 தியேட்டர்களில் வெள்ளிவிழா. 5 தியேட்டர்களில் 300 நாள். மதுரையில் 400 நாள். இதற்கிடையில் எந்தத் தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்த்தாரோ பின்னாளில் அதே தியேட்டரை விலைக்கு வாங்கி கனவை நனவாக்கினார் ராமராஜன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் மேல் கொண்ட தீவிர பற்று காரணமாக அதிமுகவில் நுழைந்து இரண்டு ஆண்டுகள் எம்.பி.ஆகவும் திகழ்ந்தார். அரசியலுக்கு வந்தபின் இவரின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நடித்த படங்கள் மண்ணைக் கவ்வ ஆரம்பித்தன. போதாக்குறைக்கு விபத்திலும் சிக்கி உயிர் பிழைத்தார். தொடர்ந்து சறுக்கல்கள் வர சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது சாமானியன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் படம் வெளியாகவில்லை. நடிக்க ஆரம்பித்தது முதல் இன்று வரை ஹீரோவாக நடித்தது தமிழ் சினிமாவில் இவர் ஒருவர் மட்டுமே.
