மும்பை மாநகரில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து 12 சிறுவர்கள் மாயமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓஷிவாரா, ஆண்டாப் ஹில், மான்குர்ட் மற்றும் சிவாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர். விளையாடச் சென்றவர்கள், கடைக்குச் சென்றவர்கள் மற்றும் டியூஷன் சென்றவர்கள் எனப் பலரும் வீடு திரும்பாதது பெற்றோர்களிடையே கடும் பீதியை கிளப்பியுள்ளது. இந்தத் தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து மாநகர காவல்துறை ‘High Alert’ விடுத்துள்ளதோடு, குழந்தைகளைத் தனியாக விட வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாயமான சிறுவர்களைக் கண்டறிய 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது ஏதேனும் கடத்தல் கும்பலின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் மர்மமான காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் மும்பை நகரில் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
