இன்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும், புகழைக் காட்டிலும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் புகழையும், பணத்தையும் பண்மடங்கு சம்பாதிக்க முடிகிறது. இதனால் இன்று வீட்டுக்கொரு யூடியூப் சேனல் செயல்பட்டு வருகிறது. பொதுவான பெண்கள் மட்டுமே சமையல் செய்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். ஆனால் காலம் மாற மாற ஆண்களும், இளைஞர்களும் கூட சமையல் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மற்றும் ஒரு முதியவர் என 6 பேர் இணைந்து கிலோ கணக்கில் அனைத்தையும் கிராம முறைப்படி சமைத்து அதனை வீடியோவாக வெளியிட்டு வந்தனர். இவர்களது கிராமத்து பேச்சும், மண்வாசம் வீசும் படியான இடமும், சமையல் செய்முறையும் பலரையும் ஈர்த்தது. யூடியூப்பில் இவர்கள் சேனல் ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அதிக பாலோவர்களை ஈர்த்தனர். 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சேனலை தற்போது 23 மில்லியன் அதாவது 2 கோடியே 34 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
பொதுவாகவே ஷொஷியல் மீடியாவில் 1 மில்லியன் பாலோவர்களை வைத்திருந்தாலே செலிபிரிட்டி எனக் கருதி அவர்களிடம் பலரும் பல விளம்பரங்களை செய்யச் சொல்லுவர். பல பொருட்களை விளம்பரம் செய்து கொடுக்குமாறு கூறி அதற்கான தொகையினையும் செலுத்துவர். ஆனால் 2 கோடிக்கு மேல் பாலோவர்களை வைத்திருக்கக் கூடிய இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் இன்று வரையிலும் ஒரு விளம்பரத்தை கூட செய்ததில்லை. இதற்கான விளக்கத்தை சமீபத்தில் நடந்து உலக முதலீடாளர்கள் மாநாட்டில் அந்த சேனலில் உள்ளவர்கள் கொடுத்திருந்தனர்.
இந்த சேனலை ஆரம்பிக்கும் போதே, தங்களுக்கென சில விதிமுறைகளை அவர்கள் வகுத்துக் கொண்டார்களாம். அதன் படி தங்களது சேனல் வீடியோவில் பிராண்ட் ப்ரோமோஷன் செய்யக் கூடாது என்பதும் அடங்குமாம். அதேப் போல கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இந்தக் குழுவினர் நடித்திருந்த நிலையில், அதற்காக கூட தங்களது சேனலில் ப்ரோமோஷனும் செய்யவில்லையாம், அதேப் போல் அந்தப் படத்தில் நடித்ததற்காக சம்பளமும் வாங்கவில்லையாம். இவர்களது சேனலுக்கு 5 மில்லியன் பாலோவர்கள் இருந்தப் போதே, ஒரு சாக்லெட் கம்பெனி, தங்களது சாக்லெட்டுகளை வீடியோவில் 10 செகண்ட் காட்டினால் நான்கரை லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியும் கூட, அதனை இவர்கள் மறுத்து விட்டனராம்.