நடிகர் விஜயகாந்த் கடந்த மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பல நடிகர், நடிகைகள் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அப்படி அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத பலரும் குறித்து இணையத்தில் பலரும் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் வடிவேலு விஜயகாந்த் இறப்பில் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல நடிகர்கள் வெளியூரிகளில் படப்பிடிப்பில் சிக்கிக் கொண்டதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.
சூர்யா, ஜெயம்ரவி, சரத்குமார் என சென்னை திரும்பும் நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக அவரது நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துவதுடன், அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு இது நாள் வரை ஒரு இரங்கல் கூட்டம் நடத்தாதது கூட பேசுப் பொருளாக மாறி வருகிறது. இதற்கிடையில் விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு, ஓடோடி வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய். விஜய்யின் திரைப்பட வாழக்கை, விஜயகாந்தால் தான் தொடங்கியது எனலாம். அதேப் போல, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் தான் விஜயகாந்த் சினிமாவில் கொடி கட்டி பறக்கத் தொடங்கினார்.
இப்படி இவர்கள் மாறி மாறி ஒருவருக்கொருவர் உதவிக் கொண்ட நிலையில், அவர் இறந்த செய்தி கேட்டு, நேரில் வந்த விஜய், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. அத்தோடு, அவர் திரும்பி வீட்டிற்கு செல்ல காரில் ஏற முற்பட்டப் போது அவர் மீது காலணி வீசப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து இந்த செயலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த் குறித்து பல விசயங்களை நெகிழ்ச்சிப் பூர்வமாக பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் அவரை வைத்து அதிகபட்சமாக 19 படங்களை இயக்கியது எஸ்.ஏ.சந்திரசேகர் தான். அப்படி அவருடன் பணியாற்றிய அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்ட போது, விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அறியாமையை காட்டுவதாக தெரிவித்தார். இன்னும் நாம் பக்குவப்படவில்லை எனவும், அவர்களை நினைத்து பரிதாபப்படுவதாகவும் கூறியுள்ளார்.