புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ள அதிரடி நிலைப்பாடு டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐந்தாவது முறையாக ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், கடந்த முறை வழங்கப்பட்டதைப்போல சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவிகளை பாஜக மீண்டும் கோருவது கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தனது 4 எம்.எல்.ஏ-க்களுடன், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரைச் சேர்த்து தங்களுக்கு 7 பேரின் ஆதரவு இருப்பதாகக் கூறி பேரம் பேசுகிறது. குறிப்பாக, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற சுயேச்சை வேட்பாளர் விக்னேஸ்வரனை பாஜக தன்பக்கம் இழுத்தது ரங்கசாமியை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக, பாஜகவிற்கு ஒரு அமைச்சர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி மட்டுமே தர முடியும் என்று ரங்கசாமி கறாராகத் தெரிவித்துவிட்டார்.
இந்த முட்டுக்கட்டையைத் தீர்க்க புதுச்சேரி வந்துள்ள மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள் ரங்கசாமியைச் சந்திக்க நேரம் கேட்டபோது, “நானே உங்களை அழைக்கிறேன்” என்று கூறி அவர்களைத் தவிர்த்துள்ளது பாஜக தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஒருவேளை பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற சுயேச்சைகளின் ஆதரவுடன் மாற்று அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்தையும் ரங்கசாமி கையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியலில் தவெக-காங்கிரஸ் கூட்டணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதுச்சேரியிலும் தவெக-வின் பெயரை ரங்கசாமி பயன்படுத்துவது பாஜகவிற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நிதியுதவியும் ஒத்துழைப்பும் ஆட்சி நடத்த மிக அவசியம். இருந்தபோதிலும், தனது அரசியல் பிடிமானத்தை விட்டுக்கொடுக்க ரங்கசாமி தயாராக இல்லை என்பதை இப்போதைய நகர்வுகள் காட்டுகின்றன. தவெக-வுடன் அவர் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் குறைவு என்று கருதப்பட்டாலும், அந்த வாய்ப்பைச் சுட்டிக்காட்டி பாஜகவிடம் அவர் நடத்தும் ‘பார் கெய்னிங்’ (Bargaining) புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களில் பாஜக பணிந்து போகுமா அல்லது புதுச்சேரி அரசியலில் புதிய மாற்றம் நிகழுமா என்பது தெரியவரும்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…