மேஜிக் ராதிகா. இவரது பெயரைப் போலவே இவரும் ஒரு மேஜிக்கான நடிகை தான். 60ஸ் காலகட்டங்களில் கொடி கட்டி பறந்த நடிகை மேஜிக் ராதிகா. 1968-ம் ஆண்டு சின்னஞ்சிறு உலகம் என்ற படத்தில் ஜெமினி கணேசனுக்கு ஜோடி சேர்ந்தவர் நடிகை மேஜிக் ராதிகா. அதனை தொடர்ந்து அப்போதைய முன்னணி நடிகர்கள் ஜெய்சங்கர், மனோகர், சுருளிராஜன், எம்.ஜி.ஆர் என பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் ராதிகா. தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்தார். க்ளாசிக், மேற்கத்திய நடனம், மேஜிக், கராத்தே அன பல கலைகளையும் கற்று, அதனை தனது நடிப்பில் பயன்படுத்தினார் ராதிகா.
லண்டன், பாரீஸ், அமெரிக்கா என பல நாடுகளுக்கு பயணம் செய்து மேஜிக் திறமைகளை மேடை ஏறி செய்து காட்டி அசத்தியிருக்கிறார். அதன்பிறகே அவர் மேஜிக் ராதிகா என அழைக்கப்பட்டார். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழில் மட்டும் 75 திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் உடன் பல படங்களில் நடித்துள்ள அவர், எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே தான் அழைப்பாராம். எம்.ஜி.ஆரிடம் கூறாமலயே திருமணம் செய்து கொண்டாராம் ராதிகா.
அந்த நேரத்தில் சத்தியா ப்ரொடக்ஷன் சார்பில் 5 படங்களில் ராதிகாவை புக் செய்தாராம் எம்.ஜி.ஆர். அந்த நேரத்தில் தான் திருமணத்தை பற்றி எம்.ஜி.ஆரிடம் ராதிகா கூற, அதிர்ச்சியடைந்தாராம் எம்.ஜி.ஆர். பிறகு தனது கணவரிடம் ஃபர்மிஷன் கேட்டிருக்கிறார் ராதிகா. நடிப்பு வேண்டுமா? நான் வேண்டுமா? என்பதை நீயே முடிவு செய்து கொள் என ராதிகாவின் கணவர் கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர்-இடம் படத்தில் நடிக்க விரும்பவில்லை என கூற, சரி என அவரும் கூறிவிட்டாராம். அதிலிருந்து இருவரும் மனக்கசப்புடனே இருந்து வந்துள்ளனர். பிற்காலத்தில் ராதிகா, தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில், அவரது மகனையும் கணவரே எடுத்து செல்ல முயன்றார்களாம்.
அந்த நேரத்தில் ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சென்ற ராதிகா, வீட்டினுள் இருந்த எம்.ஜி.ஆரிடம் வெளியே இருந்தப் படி போனில் பேசியுள்ளார் ராதிகா. தனது குழந்தையை வாங்கித் தருமாறு இவர் கெஞ்சிக் கேட்க, எனக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டாய், உன் திறமையால் உனது குழந்தையை வாங்கிக் கொள் என கூறிவிட்டாராம் எம்.ஜி.ஆர். அதன் பிறகு இருவருக்குள்ளான அந்த பேச்சு நின்று விட்டதாக ராதிகா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ஜெய்சங்கரினுடைய நாடக கம்பேனியில் நடித்துக் கொண்டிருக்கும் போது, கிட்டார் வாசித்த சந்திரசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராதிகா. அவர் ஒரு பிராமின், ராதிகா ஒரு கிறிஸ்டியன். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் கூட, இருவரும் கிறிஸ்டியன் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சில காலம் நன்றாக சென்ற இவர்களது திருமணத்தில், கணவர் தனது மதத்தையும், வேதங்களையும் பின்பற்றும் படி சித்ரவதை செய்ததாகவும், ஆனால் தனது வேதத்தை தன்னால் விட முடியாது என ராதிகா உறுதியாக இருந்ததாகவும், அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறியிருக்கிறார்.