இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ்டுடே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இவானா, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடுத்து இப்போது பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இதற்கெல்லாம் முன்பாக, பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்த படம் கோமாளி.
இந்த படத்தின் கதையை நடிகர் பார்த்திபனிடம் பணிசெய்த அசோசியேட் டைரக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பிரதீப் ரங்கநாதன் திருடியதாக ஒரு தகவலை, ஒரு நேர்காணலில் நடிகர் பார்த்திபனே கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, லவ்டுடே படத்தில், பக்காவா இருந்த ஒரு நல்ல பையனை, கடைசியில இப்படி பார்த்திபன் மாதிரி பேச வெச்சுட்டீங்களே என ஒரு காட்சியில் வசனம் வரும். இதை பார்த்தவுடன், தியேட்டர்களில் படம் பார்த்தவர்களை போல நானும் உடனே சிரித்துவிட்டேன். பின்புதான் அதில் இருந்த குத்தல் எனக்கு புரிந்தது.
அதாவது நல்லா இருந்தவன், இப்படி பைத்தியம் மாதிரி ஆயிட்டியேன்னு சொல்றதுக்காக அந்த டைரக்டர் முயற்சி பண்றாருன்னு எனக்கு கொஞ்சம் தாமதமாக தெரிந்தது. ஆனால் நான் பைத்தியம் இல்லை. இதற்கு என்ன காரணம் என்றால், என்னிடம் கிருஷ்ணமூர்த்தி என்ற அசோசியேட் டைரக்டர் இருக்கிறார். அவர் ஒரு கதை பண்ணியிருந்தார். அந்த கதையும், கோமாளி கதையும் ஒண்ணுதான் அப்படீன்னு ஒரு பிரச்னை வருது. இந்த பிரச்னை குறித்து பாக்யராஜ் முன்னிலையில் பேசி 10 லட்சம் ரூபாய் கிருஷ்ணமூர்த்திக்கு வாங்கி தரப்பட்டது.
இது எப்பவோ முன்னாடி நடந்த ஒரு விஷயம். இதனால் இப்படி ஒரு சின்னதா ஒரு பழிவாங்கலாமான்னு தோணும். ஆனால் படம் பார்த்துவிட்டு, அந்த படம் எனக்கு எப்படி பிடிச்சதுன்னு பிரதீப் ரங்கநாதனுக்கு நான் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். பல மேடைகளில் நான் லவ்டுடே பத்தி பேசீட்டே இருக்கேன். இது என்னோட மெச்சூரிட்டி. இன்னும் கொஞ்சம் காலம் கழித்தால், அவருக்கும் அந்த மெச்சூரிட்டி வந்துவிடும் என்று பேசி இருக்கிறார் நடிகர் பார்த்திபன். இதன்மூலம் கோமாளி படத்தின் கதை, பார்த்திபனின் அசோசியேட் டைரக்டருக்கு சொந்தமானது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் நடிகர் பார்த்திபன்.