சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மூத்த மகன் முருகனுக்கு செல்வி என்ற பெண்ணுடன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். முருகனின் தம்பியான 39 வயது சின்ன திருப்பதிக்கு திருமணமாகாததால், அவர் வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். முருகன் கட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலையில், சின்ன திருப்பதி தனது அண்ணன் வீட்டிற்குச் சென்று சாப்பிடுவதையும், அண்ணி செல்வியிடம் பணம் வாங்குவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
நாளடைவில், சின்ன திருப்பதி வாங்கும் பணத்தைக் கொண்டு மது குடித்து வந்ததால், செல்வி அவருக்குப் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்ன திருப்பதி, கடந்த சில மாதங்களாக அண்ணி செல்வியிடம் பணம் கேட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அத்துமீறல் குறித்து செல்வி தனது கணவர் முருகன் மற்றும் தனது தம்பி மணிகண்டன் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் கூறி கதறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சின்ன திருப்பதி மீண்டும் அண்ணன் வீட்டிற்குச் சென்று செல்விக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வியும் அவரது குழந்தையும் சத்தம் போடவே, திருப்பதி அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து செல்வி உடனடியாகத் தனது தம்பி மணிகண்டனுக்குத் தகவல் தெரிவித்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மணிகண்டன், நேராகத் திருப்பதியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த திருப்பதியைத் தனியாக இழுத்துச் சென்று அருகில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே வைத்து கண்டித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தை அடக்க முடியாத மணிகண்டன், திருப்பதியின் தலையைப் பிடித்து அங்கிருந்த சுவரில் பலமாக மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்ன திருப்பதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த ஜலகண்டாபுரம் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக மணிகண்டனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
