பள்ளி மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் கேரளாவில் வாட்டர் பெல் என்ற திட்டம் அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் அதற்கான சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் கோடை மாதங்களில் நீரிழப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் மாணவர்களின் உடல்நலத்தையும், கவனம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.
இந்த முயற்சி தமிழகத்தில் உள்ள 37,211 அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 46 லட்சம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் மாணவர் நலன் சார்ந்த முயற்சிகளில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் காலை உணவு திட்டம் போன்ற பிற நலத்திட்டங்களுடன் இணைந்து இது மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி மாணவர்கள் தண்ணீர் அருந்த 3 முறை தலா 5 நிமிடங்கள் இடைவேளை அளிக்கப்படும்.
